அன்பானவர்களே, "அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்" (சங்கீதம் 91:15) என்று வேதம் கூறுவதுபோல, நாம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் நமக்குப் பதிலளிப்பார். நீதிமான் கூப்பிடும்போது ஆண்டவர் உடனடியாக பதிலளிப்பார் (யாக்கோபு 5:16). தீர்க்கதரிசியாகிய எலியா மிகவும் நீதிமானாயிருந்தான். "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது" (யாக்கோபு 5:17,18) என்று வேதம் கூறுகிறது. எலியாவுக்கு தேவன் சிநேகிதர்போல இருந்தார். அவனுக்கு மழை தேவைப்பட்டபோது, அவன் தேவனைநோக்கி ஜெபித்தான். கர்த்தர் உடனடியாக பதிலளித்தார். ஒரு சிநேகிதனைப்போல அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். தேவனுக்குள் திடநம்பிக்கையாயிருங்கள். அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு மகிழ்ச்சியாக பதிலளிப்பார். "ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்" (யாத்திராகமம் 33:11) என்று வேதம் கூறுவதுபோல, மோசே தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்தான். அவன் தேவனோடு எப்போதும் பேசிக்கொண்டிருந்தான்.
சமீபத்தில் நாங்கள் விமானத்தில் பயணித்தபோது, என் கணவருக்கும் எனக்கு வெவ்வேறு இடங்களில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஒரு பயணியை ஓர் இருக்கை மாறி அமரும்படி கேட்டுக்கொண்டோம். அவர் பிரமுகர் போல தோற்றமளித்தார். அதை அவர் விரும்பி உட்கார்ந்திருந்தபடியினால், அவர் இருக்கை மாறமாட்டார் என்பது தெரிந்தது. ஆகவே நான், "ஆண்டவரே, இந்த மனுஷனின் இதயம் நெகிழட்டும். அவர் வேறு இருக்கைக்கு மாறட்டும்," என்று மனதுக்குள் ஜெபித்தேன். திடீரென அவர் எழும்பி விமானத்தில் வேறு பக்கத்திற்கு சென்றுவிட்டார். நாங்கள் இருவரும் இணைந்து அமர்ந்தோம். நான் என்ன ஜெபித்தேன் என்பது என் கணவருக்கு தெரியாது. ஆனால், தேவன் அறிந்திருந்தார். நம் தேவன் எவ்வளவு நல்லவர்! நாம் கேட்பதை அவர் கொடுக்கிறார்.
உங்களை உற்சாகப்படும்படியாகவே இந்த எளிய உதாரணத்தை பகிர்ந்துகொள்கிறேன். காரியம் முக்கியமானதாக தோன்றாதிருக்கலாம். ஆனால், தேவன் நம் ஜெபங்களுக்கு கருத்துடன் செவிகொடுக்கிறார். உண்மையான வேண்டுதல், ஜீவனுள்ள தேவனுக்கு ஆத்துமாவின் கூப்பிடுதலாக காணப்படுகிறது. நாம் ஏன் ஜெபிக்கவேண்டும்? தேவன் எப்போதும் நம்முடன் இருப்பதற்காக நாம் ஜெபிக்கவேண்டும். இதுவே நம் இருதயத்தின் வாஞ்சையாயிருக்கிறது. பதில் வரும்போது, மெய்யாகவே நாம் தேவ பிரசன்னத்தை உணருவோம். தீமைக்கு நம்மை விலக்கி, இன்னும் நீதியாகவும் பரிசுத்தமாகவும் வாழும்படியான ஊக்கம் கிடைக்கும். "நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?" (உபாகமம் 4:7) என்றும், "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து...இரட்சிக்கிறார்" (சங்கீதம் 34:18) என்றும் வேதம் கூறுகிறது. உள்ளமுடைந்தவர்கள் தேவனுக்கு சமீபமாக செல்ல அதிகமாய் விரும்புகிறார்கள். பிரார்த்தனை திருவிழாக்களின்போது, ஜனங்கள், தங்களோடு இருக்கும்படியாக தேவனிடம் முறையிடுவதை கண்டிருக்கிறேன். "ஆண்டவரே, எனக்கு இந்த உலகில் யாருமில்லை. நீர் வேண்டும்," என்று அவர்கள் ஜெபிப்பதை கேட்டிருக்கிறேன். அந்த சமயங்களில் ஆண்டவர் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவார்; அவர்கள் சந்தோஷத்தினால் நிரம்புவார்கள். இன்றைக்கு ஆண்டவர் உங்களைப் பார்த்து, "நீ என்னை நோக்கிக் கூப்பிடுவாய், நான் உனக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே உன்னோடிருந்து, உன்னைத் தப்புவித்து, உன்னைக் கனப்படுத்துவேன்" என்று கூறுகிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்குப் பதில் அளிப்பேன் என்று நீர் கொடுத்துள்ள வாக்குத்தத்தத்தை நம்பி இன்றைக்கு உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். நீர் கூறியுள்ளபடியே ஆபத்துக்காலத்தில் நீர் என்னோடு கூட இருந்து, என்னை தப்புவித்து, கனப்படுத்துவீர் என்று விசுவாசிக்கிறேன். எலியாவின் ஜெபத்திற்கு, மோசேயின் ஜெபத்திற்கு செவிகொடுத்ததுபோல, என்னுடைய ஜெபத்திற்கும் செவிகொடுப்பீர் என்று அறிந்திருக்கிறேன். நான் கேட்கிறவை எல்லாவற்றுக்கும் நீர் கவனமாய் செவிகொடுப்பீர் என்பதை அறிந்து, ஒரு சிநேகிதனைப்போல உம்மை அணுகும் திடநம்பிக்கையை எனக்கு தந்தருளும். என் வாழ்வில் உம்முடைய பிரசன்னம் தங்கவேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும்; உம்முடைய சந்தோஷம் எனக்குள் நிரம்பி வழியட்டும். தீமையிலிருந்து விலகி, நீதியாகவும் பரிசுத்தமாகவும் என்னை காத்துக்கொள்ள உதவும். எப்போதும், குறிப்பாக என் உள்ளமுடைந்திருக்கும்போது, நீர் எனக்கு சமீபமாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் உண்மையுள்ளவராயிருப்பதற்காகவும், என்மேல் இருக்கும் அழைப்புக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் ஆத்துமா தொடர்ந்து உம்மை நோக்கி முறையிடட்டும்; உம்முடைய ஆறுதலின் பிரசன்னத்தை நான் எப்போதும் உணர உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.