அன்பானவர்களே, நமக்கு நன்கு அறிமுகமான, "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:3) என்ற வேத வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். தேவன் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.

"நான் ஆண்டவருக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டேன். ஆகவே, என் உள்ளத்தில் குற்றவுணர்ச்சி இருக்கிறது. பரம தகப்பனை வேதனைப்படுத்திவிட்டோமே என்று மனம் புண்படுகிறேன்," என்று நீங்கள் சொல்லலாம். "தேவ பிரசன்னத்தை என்னால் உணர இயலவில்லை. அவர் என்மீது கோபமாக இருக்கிறாரா?" என்று நீங்கள் கேட்கலாம்.  

தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து குற்றவுணர்ச்சியடைந்த தருணத்தை தாவீதும் அனுபவித்தான். இந்தப் பாவத்தினிமித்தம் அவனுடைய மகன் மரித்துப்போவான் என்று ஒரு தீர்க்கதரிசி கூறியதால், தாவீது மனமுடைந்துபோனான். ஆனாலும், அவன் தன் வாழ்க்கையை மீண்டும் தேவனுக்கு அர்ப்பணித்து, மன்னிப்புக்காக கெஞ்சியதால், தேவன் அவன் ஆத்துமாவை தேற்றினார். தாவீதின் ஆத்துமாவை தேற்றியதுபோல, தேவன் உங்கள் ஆத்துமாவையும் இன்றைக்கு தேற்றுவார்.

பாவத்தை விட்டுவிட்டு, தேவனிடம் மன்னிப்பை கேளுங்கள். அவர் உங்களை தமது இரத்தத்தினால் கழுவி, உங்களுக்கு புதுவாழ்வை தருவார். இன்றிலிருந்து அவர் உங்களை நீதியின் பாதையில் நடத்தி, எல்லா சோதனைகளையும் மேற்கொள்ள உங்களுக்கு உதவுவார். அப்படி அர்ப்பணிக்க நீங்கள் ஆயத்தமா? தேவன் உங்கள் ஆத்துமாவை தேற்றவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அவரிடம் மன்னிப்பு கேட்போம். அவர் உங்கள் ஆத்துமாவை தேற்றி, உங்களை நீதியின் பாதையில் நடத்துவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, குற்றவுணர்ச்சி நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வந்து, நீர் என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன். நான் பாவம் செய்து, உம்மை விட்டு விலகிப்போனேன்; ஆனால், இன்றைக்கு என் வாழ்க்கையை மறுபடியும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை கழுவி, என் ஆத்துமாவை தேற்றும். எல்லா சோதனைகளையும் மேற்கொள்வதற்கு எனக்கு உதவி செய்து என்னை நீதியின் பாதையில் நடத்தும். என்னுடைய இரட்சகராகிய உம்மை அண்டிக்கொள்ள நான் வாஞ்சிக்கிறேன்; ஆகவே, மறுபடியும் உம்முடைய பிரசன்னத்தை நான் உணர உதவி செய்யும். என் இருதயத்தையும் ஆவியையும் புதுப்பியும்; பாவத்தை விட்டுவிடக்கூடிய பெலனை எனக்குத் தாரும். நான் இடறினாலும் நீர் பாராட்டும் இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய நாமத்தின் மகிமைக்காக நான் வாழும்படி அனுதினமும் என்னை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.