எனக்கு அருமையானவர்களே, "வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்" (சங்கீதம் 121:2) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். இந்த வசனம் கூறுகிறவண்ணம், ஆண்டவரிடமிருந்து நமக்கு ஒத்தாசை வருகிறது. ஆகவே, நீங்கள் யாருக்கும், எந்த காரியத்துக்கும் பயப்படவேண்டாம். வானத்தையும் பூமியையும் படைத்தவர் உங்களுக்குச் சகாயராயிருக்கிறார். அவர் உங்களுக்கு புது வாழ்வை உருவாக்குவார். அவர், "இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். பழையவைகள் ஒழிந்துபோயின," என்று வாக்குப்பண்ணுகிறார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.

கடந்த காலத்தில் நடந்தவற்றால் இன்னும் பாடு அனுபவிக்கிறீர்களா? பழைய பாவங்களும் பிரச்னைகளும் இன்னும் உங்களை துரத்துகின்றனவா? பழைய உறவுகள் அல்லது முன்பு செய்த காரியங்களின் விளைவுகள் இன்னும் உங்களை பாதிக்கின்றனவா? பொல்லாத மனுஷர் பேசிய புண்படுத்தும் வார்த்தைகள் மனதை விட்டு அகலவில்லையா? பயப்படாதிருங்கள். தேவன், "இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" (வெளிப்படுத்தல் 21:5) என்று கூறுகிறார்.   ஆகவே, ஆண்டவர் உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் புதிதாக்குவார்; உங்கள் கண்ணீரைத் துடைப்பார். இயேசு, இந்த எல்லா மாற்றங்களையும் செய்வதால் தைரியமாயிருங்கள். உங்கள் வாழ்வில் சகலத்தையும் மறுரூபமாக்குகிற, உங்களுக்கு புதிய ஆரம்பத்தை உருவாக்குகிற வல்லமை அவருக்கு இருக்கிறது. ஆண்டவரையே நம்புங்கள்.

சோனியா சார்லஸ் என்ற இளம்பெண் தன்னுடைய சாட்சியை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்கள்: நான் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய அப்பாவும் அம்மாவும் விபத்தில் மரித்துப்போனார்கள். என் உள்ளம் சுக்குநூறாக நொறுங்கியது. என்னுடைய அக்காவும் தம்பியும் என்னுடன் இருந்தனர். என்னுடைய அக்காவுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. என் தம்பி படித்துக்கொண்டிருந்தான். எங்கள் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு எங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரவில்லை. என் தம்பிக்கு படிப்பு கட்டணம் செலுத்த பணமில்லை. ஆகவே, நான் வேலை தேடி முடிவெடுத்தேன். நான் எவ்வளவோ முயற்சித்தும், வேலை கிடைக்கவில்லை. ஆகவே, உள்ளமுடைந்தேன்; நம்பிக்கை இழந்தேன்.

அந்த சமயத்தில், நான் வெளியே எங்கோ சென்றுகொண்டிருந்தபோது, இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை பார்த்தேன். நான் உள்ளே சென்று, ஜெப வீரர்களிடம் என்னுடைய பிரச்னைகளை பகிர்ந்துகொண்டேன். அவர்கள் எனக்காக அதிக பாரத்துடன், எனக்காக எல்லாவற்றையும் மாற்றி, புதிதாக்கவேண்டும் என்று இயேசுவிடம் ஜெபித்தார்கள். ஓர் அற்புதம் நடந்தது. எங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் வந்தது. தேவன் எங்களுக்கு உதவி செய்தார்; எனக்கு வேலையும் கிடைத்தது. ஜெப கோபுரத்தில் நான் UTurn ஊழியத்தில் சேர்ந்தேன்.ஆண்டவர் என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பினார்.

பக்தியுள்ள கணவர் கிடைக்கவேண்டும் என்று ஆண்டவரிடம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். என்ன அற்புதம்! தேவனுக்கு பயந்த கணவரை கொடுத்து ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார். எல்லாம் சரியாக அமைந்தது. தேவன் என் வாழ்வில் எல்லாவற்றையும் புதிதாக்கியுள்ளார். பரலோகத்தின் தேவன் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதால் எப்போதும் அவரையே நோக்கிப் பார்க்கிறேன். இது எவ்வளவு ஆச்சரியமான சாட்சி! அன்பானவர்களே, தேவன் மெய்யாகவே உங்களுக்கும் இப்படியே உதவுவார். நாம் அவரிடம் ஜெபிப்போம்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எனக்கு ஒத்தாசை செய்வதாக நீர் உறுதியாய்க் கூறியுள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தாவீதைப் போல உம்மேல் நான் திடநம்பிக்கையாயிருக்கவும், நீர் அற்புதம் செய்யும்படி பொறுமையாக காத்திருக்கவும் உதவும். நீர் சகலவற்றையும் புதிதாக்குகிற ஆண்டவராயிருக்கிறீர். ஆண்டவரே, என் வாழ்விலிருந்து எல்லா நிந்தையையும் பாவத்தையும் சாபத்தையும் ஒடுக்குதலையும் எடுத்துப்போடும். கடந்துபோன சிறுமைகள் என் மனதில் இனிமேலும் என் மனதிலும் வாழ்விலும் தங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும். உம்முடைய வல்லமையினால் எல்லாவற்றையும் புதிதாக்கும்; என் வாழ்நாள் முழுவதும் உம்முடைய நன்மையை நான் ருசிக்கட்டும். உம்மை உண்மையாய் சேவிக்கவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கவும் எனக்கு உதவும். ஆச்சரியமாக விளங்கும் உம்முடைய கிருபைக்காகவும் ஒத்தாசைக்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.