அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்" (ஏசாயா 58:8) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். இந்த வசனம் கூறுவதுபோல, உங்கள் வெளிச்சம் விடியற்காலத்தைப் போல தோன்றும். ஆம், உங்களுக்கு நியாயம் செய்யப்படுவதற்காக காத்திருக்கலாம். கடைப்பிடித்த நீதிக்கும், இத்தனை ஆண்டுகள் நீங்கள் காத்திருந்ததற்கும், பாடனுபவித்தற்கும் உரிய பலன் கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு இருக்கலாம். ஆனாலும், இன்றைய வாக்குத்தத்தம் கூறுகிறதுபோல, உங்களுக்கு சுகவாழ்வு துளிர்க்கும். இத்தனை நாள்கள் நீங்கள் அழுது புலம்பி காத்திருந்த விடுதலையை தேவன் இன்றைக்கு உங்களுக்கு தருவார். இதற்கு முந்தைய வசனங்களை பார்த்தால், இந்த சுகமும் வெளிச்சமும் நம் வாழ்க்கையில் எப்படி வரும் என்பதை அறிந்துகொள்ளலாம். பசியோடு இருக்கிறவர்களுடன் நம் உணவை பகிர்ந்துகொண்டு, துரத்துண்ட சிறுமையானவர்களுக்கு தங்குவதற்கு இடமளித்து, ஆடையில்லாதவர்களுக்கு ஆடை கொடுத்து, உங்கள் சொந்த மாம்சமானவனுக்கும் இரத்தமானவனுக்கும் முன்பாக ஒளித்துக்கொள்ளாமலிருந்தால், உங்கள் வெளிச்சம் விடியற்கால வெளுப்பைப் போல உதிக்கும்; உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் தோன்றும். உங்கள் நீதி உங்களுக்கு முன்பாகச் செல்லும். கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்னாலே காக்கும். ஆகவே, சந்தோஷமாயிருங்கள். நீங்கள் உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள்மேல் கரிசனை கொண்டு, மக்களுக்கு சேவை செய்யும்போது, தேவன் உங்களுக்கு நியாயம் செய்வார்; உங்கள் நீதிக்கான பலனை அருளிச்செய்வார்; நிச்சயமாகவே உங்களுக்கு ஆசீர்வாதத்தை தருவார். ஆகவே, கவலைப்படாதிருங்கள். அவருடைய வெளிச்சம் இன்றைக்கு உங்கள்மேல் உதிக்கும். நிச்சயமாகவே நீங்கள் உங்களுக்கான பலனை பெறுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு நீர் கொடுத்துள்ள அருமையான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய கற்பனைகளின்படி நடந்து, சிறுமையானவர்களுக்கும், தேவையிலுள்ளோருக்கும் உதவுகின்றதும், பிறரை விசாரிக்கிறதுமான சதையுள்ள இருதயத்தை எனக்குள் வைக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நான் அனுபவித்த பாடுகளையும், ஆசீர்வாதமும் நியாயமும் என் வாழ்வில் விளங்கும்படி காத்திருந்ததையும் அறிந்திருக்கிற நீர், ஒருபோதும் என்னை கைவிடமாட்டீர் என்ற நம்பிக்கையால் ஆறுதல் அடைகிறேன். இன்றைக்கு என்னை சந்தித்தருளும். என் வாழ்வில் உம் வெளிச்சம் விடியற்கால வெளுப்பைப் போல உதிக்கட்டும். உம்முடைய நியாயமும் விடுதலையும் ஆசீர்வாதமும் எனக்குக் கிடைக்கட்டும். நான் சுகவாழ்வை அனுபவிக்கவும், உம்முடைய சமாதானத்தை அனுபவித்து மகிழ கிருபை செய்யவும் வேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.