எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்" (2 கொரிந்தியர் 9:8) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். தேவன், உங்கள்மேல் ஆசீர்வாதத்தை சம்பூரணமாக பொழியச் செய்ய விருப்பமாயிருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.

சகலவித நற்கிரியைகளாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளும்படி வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (கொலோசெயர் 1:10). கர்த்தருக்குப் பிரியமானவிதத்தில் நீங்கள் நடந்துகொள்ளும்போது, முற்றிலும் அவருக்கு உகந்தவர்களாக காணப்படுவீர்கள்; தேவனுக்கு முன்பாக கனத்துக்குரிய பாத்திரமாய் விளங்குவீர்கள். "கோபாக்கினைப் பாத்திரங்கள்", "கிருபாபாத்திரங்கள்" என்று இருவித பாத்திரங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ளன (ரோமர் 9:23).

"கோபாக்கினைப் பாத்திரம்" நம்மை அழிவுக்கு நேராக வழிநடத்தும். ஆனால், நாம் "கிருபாபாத்திரத்தினால்" நிரப்பப்படும்போது, நம் வாழ்வில் தேவ மகிமை காணப்படும். அல்லேலூயா! "கிருபாபாத்திரமாக" மாறுவது எவ்வளவு மகிமையான வாழ்வு! நாம் முற்றிலும் கர்த்தருக்குப் பிரியமானவிதத்தில் அவருக்குப் பாத்திரராக நடந்துகொள்ளும்போது, அப்படி மாறுவோம். உங்கள் பாத்திரம் நிரம்பிவழியத்தக்கதாக நீங்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 23:5). நீங்கள் நிரம்பி வழிகிற பாத்திரமாக மாறுவீர்கள். "சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்" (ரோமர் 2:7) என்று வேதம் சொல்கிறது. ஆம், அன்பானவர்களே, இப்போது ஆண்டவர் உங்களை "கிருபாபாத்திரமாக" ஆசீர்வதிப்பார். தயவுசெய்து, உங்கள் வாழ்க்கையை ஆண்டவரிடம் ஒப்படைப்பீர்களா? அவரது கரங்களில் நீங்கள், மகிமையால் நிரப்பப்பட்ட பாத்திரமாய், சௌந்தரியமானவர்களாக மாற்றப்படுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் எனக்கு தந்திருக்கும் மகிமையுள்ள வாழ்க்கைக்காக நன்றி செலுத்துகிறேன். என்னை, ஆசீர்வாதத்தின் பாத்திரமாக, உம்முடைய பிரசன்னத்தை சுமந்து செல்கிறதும் உம்முடைய மகிமையால் நிறைந்திருக்கிறதுமான பாத்திரமாக, உம்முடைய இரக்கத்திற்காக தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாத்திரமாக, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரம்பி வழிகிறதான பாத்திரமாக வனைந்தருளும். என் வாழ்க்கையில் காணப்படும் உமக்குப் பிரியமில்லாத காரியங்கள் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்திடும்; உமக்குள் என்னை புதுச்சிருஷ்டியாக மாற்றும். தயவாய் என்னை வழிநடத்தி, உம் பார்வையில் பிரியமான பாத்திரமாக விளங்குவதற்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.