அன்பானவர்களே, இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும்படி, "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (எரேமியா 17:7) என்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் தருகிறார். இந்த வசனம் கூறுகிறபடியே, ஆண்டவர்மேல் மாத்திரமே நாம் நம்பிக்கை வைப்போமாக.

இன்றைக்கு, சிக்கலான பணப்பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ளவேண்டியதிருக்கலாம். ஒருவேளை, மகளின் திருமணத்திற்கான பணத்தை புரட்ட முடியுமா? பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியுமா? வீட்டுக்கு, கடைக்கு வாடகை பணம் கொடுக்க முடியுமா? வேலை செய்கிறவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியுமா? என்றெல்லாம் நீங்கள் அங்கலாய்த்துக்கொண்டிருக்கலாம். மிகவும் தாழ்ச்சியுற்றிருப்பதாக நினைக்கலாம்; பயந்துபோயிருக்கலாம்; நம்பிக்கை குறைந்துபோயிருக்கலாம். ஆனாலும், ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது, அவருடைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நாம் இக்கட்டான நிலையில் இருக்கும்போதும், தேவனால் நமக்கு வேண்டியவற்றை அருளிச்செய்ய முடியும் என்று விசுவாசிப்பது முக்கியமாகும்.

கடன்களின் மத்தியிலும் ஆண்டவருக்குக் கொடுப்பது ஆசீர்வாதத்தையும் கடனிலிருந்து விடுதலையையும் தரும் என்று சிலர் கண்டிருக்கிறார்கள். ஆகவே, தற்போதைய சூழலிலும், ஆண்டவருக்கு தொடர்ந்து கொடுப்பதோடு, அவர் உங்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார் என்று விசுவாசியுங்கள்.

UTurn நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பின்போது ஒரு சிறுமி தொடர்புகொண்டு, "நான் எட்டாவது வகுப்பு படிக்கவேண்டும். ஆனால், இதுவரை பாதி கட்டணம்தான் செலுத்தியிருக்கிறோம். சீக்கிரமே சேர்க்கை முடியப்போகிறது. ஆண்டவர் ஒரு அற்புதம் செய்யும்படி ஜெபியுங்கள்," என்று கேட்டுக்கொண்டாள். அவ்வளவு சிறுவயதிலேயே அவள் ஆண்டவர் கொண்டிருக்கும் விசுவாசமும் நம்பிக்கையையும் அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. நாங்கள், அவளோடு இணைந்து ஜெபித்த பிறகு, அடுத்த வாரம் அவள் மீண்டும் தொடர்பு கொண்டு, ஆச்சரியவிதமாக, பள்ளியில் மீதி கட்டணத்திற்கு விலக்கு கொடுத்துவிட்டார்கள் என்று தெரிவித்தாள். எப்படி அது நடந்தது என்று அவளுக்கு விளங்கவில்லை; ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் அவளுக்கு அப்படி செய்திருந்தார்கள். அந்தச் சிறுமி, ஜெபித்ததற்காக எங்களுக்கு நன்றி கூறினாள். அன்பானவர்களே, இந்த தேவனையே நாம் சேவிக்கிறோம். நீங்கள் ஆண்டவர்மேல் வைத்திருக்கும் விசுவாசம் வீணாய்ப்போகாது. அவர் உங்களுக்காக பெரிய அற்புதங்களைச் செய்வார். ஆகவே, இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும் ஆண்டவர்மேல் கொண்டிருக்கும் விசுவாசத்தில் உறுதியாயிருப்பீர்களா? இப்போதே ஜெபிப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வாக்குத்தத்தத்தின் மூலம் என்னை உற்சாகப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறவராக, என் யேகோவாயீரேவாக இருக்கிறீர்.  ஆண்டவரே, சிலவேளைகளில் சூழ்நிலைகளைக் கண்டு, பிரச்னைகள் தொடருவதைக் கண்டு, உம்மேல் நம்பிக்கை இழந்து, சுயமாக காரியங்கள் செய்ய முயற்சித்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். நான் சந்தேகப்பட்டதற்காக, உம்மை தவறாக புரிந்துகொண்டதற்காக என்னை மன்னித்தருளும். நீர் நல்ல தேவனாயிருக்கிறீர்; உம்மால் கூடாத காரியம் எதுவுமில்லை. உம்மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். எல்லாமும் உம் காலின் கீழ் இருக்கிறபடியினால், என்னுடைய தேவைகளும் பிரச்னைகளும் உம் பார்வையில் பெரியவையாக தோன்றாது. நீரே என் பரம தகப்பன். என்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் நீர் சந்திக்கவேண்டும்; எல்லா பிரச்னைகளிலிருந்தும் என்னை அற்புதவிதமாய் விடுவிக்கவேண்டும். என்னை சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு என்னை அடையாளமாகவும் அற்புதமாகவும் விளங்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.