அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்... அவரை உயர்த்துவேன்" (யாத்திராகமம் 15:2) என்று கூறுகிறது. இன்றைக்கு தேவன் தம் பெலனை உங்கள் வாழ்க்கையில் புதுவிதத்திலும் வல்லமையான வழியும் ஊற்றுவார்.

"உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாக விளங்கும்," என்று இயேசு கூறியதை நினைத்துக்கொள்ளுங்கள். பொருளாதாரத்தில், குடும்பத்தில், வேலையில், ஊழியத்திலும் கூட நீங்கள் பெலவீனமான சூழ்நிலையில் காணப்படலாம். நீங்கள் விரும்பிய மாற்றத்தை செய்ய முடியாமல் பாரப்பட்டிருக்கலாம். ஆனால், ஆண்டவர், "நானே உனக்குப் பெலனாயிருக்கிறேன்; ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாக இருக்கிறேன்; நானே உன்னை களிகூரப்பண்ணுவேன்; என்னுடைய கிருபையையும் உண்மையையும் அறிவிக்கும் புதுப்பாட்டு உன் இருதயத்தில் எழும்பும்படி செய்வேன்,” என்று கூறுகிறார்.

ஆம், நீங்கள் ஜெயித்ததை பாட மாட்டீர்கள்; ஆனால், வெற்றியை அளித்தவர் இயேசு என்பதால், அவரை பாடுவீர்கள். போராட்டம் நிறைந்த இந்தக் காலத்திலும் அவரது கரம் வல்லமையாக அசைவாடுவதை உணருவீர்கள். அவர் உங்களை தாங்குவார்; உயர்த்துவார்; உங்கள் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்புவார். கர்த்தரே உங்களுக்குப் பெலனாயிருப்பதினால் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. வழியே இல்லாததுபோல் காணப்படும் இடத்தில் அவர் வழியை உண்டாக்குவார்; அவரே உங்களுக்கு அரணான கோட்டையும், அடைக்கலமும், துருகமுமாயிருப்பார்.

இன்றைக்கு, உங்கள் ஆத்துமா, ஆவி, சரீரம் யாவற்றையும் ஆண்டவரிடம் அர்ப்பணியுங்கள். எல்லா கவலையையும் பயத்தையும் அவரிடம் சமர்ப்பித்துவிடுங்கள்; அவருடைய பெலன் உங்கள்மீது வருவதை காணுங்கள்.  அவர் உங்கள் ஆவியை புதுப்பிப்பார்;நம்பிக்கையை திரும்ப தருவார்; சமாதானம் அளிப்பார். நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தாலும், நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாக அவரால் செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஆகவே, இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; ஆண்டவரை சந்தோஷத்துடன் பாடுங்கள். அவரது பெலன் பூரணமானது; நீங்கள் ஸ்திரமாக நிற்பதற்கு அவர் உதவுவார். அவர் உங்கள் பெலனாக மாத்திரம் இல்லாமல், உங்கள் கீதமாகவும், இரட்சகராகவும், ஜெயமாகவும் இருக்கிறபடியினால் களிகூருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய பெலவீனத்தையும், உம்முடைய பெலன் எனக்கு தேவை என்பதையும் அறிந்து இன்றைக்கு உம்மிடம் வருகிறேன். பொருளாதாரம், குடும்பம், வேலை, ஊழியத்தில் நான் சுமக்கிற பாரத்தை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நீரே என் பெலனாகவும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாக இருக்கிறீர். என்னுடைய பெலவீனத்திலே உம்முடைய பெலன் பூரணமாக விளங்கும் என்று வாக்குத்தத்தத்தை நான் நம்புகிறேன். என்னுடைய இருதயத்தை உம்முடைய சந்தோஷத்தினால் நிறைத்து, என் ஆத்துமா உம்முடைய தயவை பாடும்படி செய்யும். ஆண்டவரே, நீர் என் அடைக்கலமாகவும், பலத்த துருகமாகவும், வழியில்லாததுபோல் காணப்படும் இடத்தில் வழியை உருவாக்குகிறவருமாயிரும். என்னுடைய ஆவியை புதுப்பித்து, எனக்கு நம்பிக்கையை திரும்ப அளித்து, எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தை எனக்கு அருளிச்செய்யும். நீர் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவீர் என்றும், நான் என் இரட்சகரும் ஜெயமுமான உம்மை பாடுவேன் என்று அறிந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.