அன்பானவர்களே, நீங்கள் இயேசுவின் நாமத்தைக் குறித்து பயபக்தியாய் இருந்து, அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதால் தேவன் உங்களை நேசிக்கிறார். ஆகவே, கர்த்தர் தமது ஆரோக்கியம் நிறைந்த செட்டைகளோடு எழும்பி, "என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" (மல்கியா 4:2) என்ற வசனம் கூறுகிறதுபோல, உங்களை விசாரிக்கிறதற்கு தாம் நீதியுள்ளவராயிருப்பதை காண்பிப்பார்.

மதுரையைச் சேர்ந்த ரேணுகா கிருத்திகா என்ற சகோதரியின் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள், பல் மருத்துவப் பட்டப்படிப்பை (பி.டி.எஸ்) முதல் வகுப்பில் உயர் சிறப்பு மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று, மேற்படிப்பு படிக்க விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் ஜெப கோபுரத்திற்கு வந்து, அதற்காக ஜெபிக்கும்படி ஜெப வீரரிடம் கேட்டுக்கொண்டார்கள். தேவன் ஜெபத்தைக் கேட்டு, பட்டமேற்படிப்பில் இடம் அருளினார். ஆனாலும், அந்தப் படிப்பு கடினமாக இருந்தது. ஆகவே, அவர்கள் தினமும் ஜெப கோபுரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, படிப்பில் தேவன் அவர்களுக்கு உதவி செய்யும்படி ஜெபிக்கக் கேட்டுக்கொண்டார்கள்.  ஜெப வீரர், தேவனுடைய வசனத்தை கூறி அவர்களுக்காக ஜெபித்தபோது, பூரண மாற்றம் ஏற்பட்டது. இறுதி தேர்வின் முடிவுகள் வெளியாகின. அவர்கள் வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் ஓரிடத்தை பெற்றார்கள்.

சிறந்த மருத்துவமனையில் நல்ல பணிவாய்ப்பையும் தேவன் அவர்களுக்கு அருளி ஆசீர்வதித்தார். தொடர்ந்து, திருமணத்திற்கு தேவன் நல்ல வரனை அனுப்பினார்கள். பிரசித்தி பெற்ற மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்த கணவர் அவர்களுக்குக் கிடைத்தார். அவர்களுக்கு முதலாவது வந்த வரனே அப்படி சிறப்பானதாக அமைந்தது. தேவன், சிறந்தவற்றை தனக்கு தருவதற்காக வைத்திருந்தார் என்று அவர்கள் நன்றியோடு கூறினார்கள். நாங்கள் அவர்களுக்கு திருமண வெகுமதியாக அழகிய வேதாகமம் ஒன்றை அனுப்பி வைத்தோம். அவர்கள் அதை மிகவும் அருமையானதாக கருதினார்கள். எவ்வளவு அருமையான சாட்சி!

மெய்யாகவே, நீங்கள் இயேசுவின் நாமத்திற்குப் பயந்து, அவரிடம் பயபக்தியாய் இருக்கும்போது, அவர் உங்களை ஆசீர்வதிக்கும்படி அவரது பாதத்தில் காத்திருக்கும்போது, அவர் உங்கள் வாழ்வின்மேல் அசைவாடி, ஆரோக்கியம் கொடுத்து, பெரிய காரியங்களை செய்து முடிக்கும்படி ஆசீர்வதிப்பார். நீங்கள் சேவிக்கும் ஆண்டவர் நீதியுள்ளவரும் உண்மையுள்ளவருமாயிருக்கிறார் என்பதை மறவாதிருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய உண்மையுள்ள வாக்குத்தத்தத்திற்காக நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வசனத்திற்கேற்ப நான் வாழ்ந்து, உம்மை கனம்பண்ணி உம்முடைய நாமத்தின்மேல் பயபக்தியாய் இருப்பதற்கு எனக்கு உதவி செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நான் பேசுகிற அல்லது செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் உம்மையே முதலாவது தேடுவதற்கு கிருபை செய்யும். என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றிலும் நீரே நடுவாய் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். நான் உம்முடைய சித்தத்தின்படி வாழ்வதற்கு எனக்கு வழிகாட்டி, உம்முடைய ஆவியினால் நடத்தும். நீர் அற்புதத்தை செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். நீதியுள்ள தேவனாகிய நீர் ஆரோக்கியமுள்ள செட்டைகளோடு எழும்பி, எனக்காக யாவற்றையும் ஆயத்தம்பண்ணி, உமக்கு மகிமையாக நான் அநேக காரியங்களை செய்து முடிக்க உதவியருளும். நீர் என்னை நன்றாய் பராமரிப்பீர் என்று நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.