அன்பானவர்களே, "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்" (நெகேமியா 8:10) என்று வாக்குத்தத்தம் கூறுகிறது. நம் தேவன் சந்தோஷத்தினால் நிறைந்திருக்கிறார்; பரிசுத்த ஆவியானவரே அந்த சந்தோஷத்தை அருளிச்செய்கிறார். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது" (ரோமர் 14:17) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7:38) என்று இயேசு கூறுகிறார். இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்து ஓடும் சந்தோஷத்தின், பிரியத்தின் நதிகளை இது குறிக்கிறது. தேவனாகிய கர்த்தர், தம்மிடமிருந்து புறப்படும் சந்தோஷத்திலிருந்து பெலனை அருளுகிறார் (நெகேமியா 8:10).

ஆந்திர பிரதேசம், திருப்பதியை சேர்ந்த பால் ஜாண்சன் என்ற சகோதரர் ஒரு சாட்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவர் 2006ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். அவருக்கு பள்ளி ஒன்றில் நிர்வாகியாக வேலை கிடைத்தது; சீக்கிரத்திலேயே திருமணமும் நடந்தது. அவருக்கு இரண்டு அழகிய பிள்ளைகளைக் கொடுத்து ஆண்டவர் ஆசீர்வதித்தார். அப்போது, இயேசு அழைக்கிறார் தீர்க்கதரிசன மாநாட்டில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். அங்கு, நான் பரிசுத்த ஆவியின் நிறைவை விரும்புகிறவர்களுக்காக ஜெபித்திருக்கிறேன். ஜெபித்தபோது, பால் தேவனுடைய வல்லமையான தொடுதலை உணர்ந்தார்; பரிசுத்த ஆவியானவர் அவரை நிரப்பினார். அவர் புதிய பாஷைகளை பேசும் வரத்தை பெற்றுக்கொண்டார்; பெரிய சந்தோஷம் அவரை நிறைத்தது.

இந்த தெய்வீக சந்திப்புக்கு பிறகு, பால், கர்த்தருக்குள் அதிக சந்தோஷத்தையும் பெலனையும் அடைந்தார். அவர் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய தொடங்கினார்; எல்லாமும் நன்றாக நடந்துகொண்டிருந்தது. ஆனாலும், 2020ம் ஆண்டில் கோவிட்-19 பாதிப்பின்போது, பால் வேலையை இழந்தார். இது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னொரு வேலை தேடுவது இயலாத காரியமாக இருந்தது. அவர் வியாபாரம் செய்ய முயற்சித்து தோல்வியடைந்தார்; இது அவருக்கு இன்னும் பாரமாகியது.  இந்த இக்கட்டான சூழலில் இயேசு அழைக்கிறார் ஸ்தானாபதி ஒருவர், வணிக ஆசீர்வாத திட்டத்தில் இணையும்படி அவரை ஊக்கப்படுத்தினார். அவர் அந்த ஆலோசனையின்படி ஆந்திர பிரதேசம் குண்டூர் ஜெப கோபுரத்திற்கு சென்றார். அங்கு, ஜெப வீரர்கள் அவருக்காக மன்றாடி ஜெபித்தார்கள். தேவன் தன் வாழ்வில் ஒரு திருப்புமுனையை உண்டாக்குவார் என்று விசுவாசித்து அவர் வணிக ஆசீர்வாத திட்டத்தில் இணைந்தார்.  

2023ம் ஆண்டு, பால் தைரியமாக முடிவெடுத்து இன்னொரு வியாபாரத்தை தொடங்கினார். இந்தவேளையில், தேவனுடைய கரம் அதன்மேல் அமர்ந்தது. வியாபாரம் வர்த்திக்க ஆரம்பித்தது. தன்னுடைய முயற்சிகள் கனி கொடுப்பதை அவர் கண்டார். முன்பு போராட்டமாக காணப்பட்ட இடத்தில், அவர் லாபமீட்ட தொடங்கினார். துக்கம், சந்தோஷமாக மாறியது. தேவன், அவருடைய புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றினார்; குடும்பத்தின் நம்பிக்கையை மீட்டுக்கொடுத்தார்.

இன்றும், உங்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆண்டவருடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு. இந்த சந்தோஷம் எப்படி வருகிறது? இயேசுதாமே உங்கள்பேரில் களிகூருகிறார்; அங்கிருந்து இது பாய்ந்து வருகிறது. "அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17) என்று வேதம் கூறி, நீங்கள் அவருக்கு அன்பான பிள்ளை என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்கள்பேரில் அவர் மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார். தேவனாகிய கர்த்தர், "இவர் என்னுடைய நேச குமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்," என்று இயேசுவைக் குறித்து கூறியதுபோல், அவர் உங்கள்பேரிலும் களிகூர்ந்து, "நீ என்னுடைய நேச பிள்ளை; உன்னில் அதிக அன்பாயிருக்கிறேன்," என்று கூறுகிறார்.  இந்த அன்பான வார்த்தைகளை நீங்கள் கேட்கும்போது, ஆண்டவரின் சந்தோஷம் உங்களை இருதயத்தை முழுவதுமாய் நிரப்பும். இந்த சந்தோஷம் உங்களை மூடுவதாக. உங்கள் வாழ்க்கையில் கர்த்தரின் சந்தோஷம் நிரம்பி வழியும்படி அவர் உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் மாத்திரமே தரக்கூடிய சந்தோஷத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும் உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரானந்தமும் உண்டு என்று உம்முடைய வசனம் கூறுகிறது. என்னை உள்ளாக பெலப்படுத்தக்கூடியதும், வேறு யாராலும் இயலாதவண்ணம் என் ஆத்துமாவை திருப்திப்படுத்தக்கூடியதுமான தெய்வீக சந்தோஷத்தினால் என் இருதயத்தை நிரப்பும் தாழ்மையுடன் கேட்கிறேன். உம்முடைய அன்பையும் தயவையும் நம்பி என் வாழ்க்கையை முற்றிலும் உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். நீர் என்பேரில் அன்பாயிருக்கிறபடியினால், என்பேரில் கெம்பீரமாய் களிகூருகிறீர் என்பதை அறிகிறதினால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க வாஞ்சிக்கிறேன். என் வாழ்வில் உம்முடைய தொடுதல் தேவையாயிருக்கிற பகுதிகளில் எல்லாம் இந்த சந்தோஷத்தை ஊற்றி, என் வாழ்க்கையை பூரணமாக நிரப்புவீராக. எல்லா தடைகளையும் முறித்து, மூடியிருக்கிற எல்லா வாசல்களையும் திறந்திடும். உம்முடைய கிருபையும் சந்தோஷமும் என் வாழ்வில் நிரம்பி வழிந்து, என்னை சுற்றிலுமிருக்கிறவர்களுக்கும் பாய்ந்து அவர்களையும் உயர்த்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன், ஆமென்.