அன்பானவர்களே, "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்பது எத்தனை மகிழ்ச்சி! பலவான்களுக்குக் கூட குறைவு ஏற்படுவதுண்டு; ஆனால், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது என்று இந்த வசனம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.

மக்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களை சாதிக்கலாம். ஆனால், அவர்கள் கிறிஸ்து இல்லாதவர்களாக காணப்பட்டால், வெறுமையாகவே இருப்பார்கள். நாம் ஆண்டவரைத் தேடும்போது, நம் வாழ்வில் அவர் எல்லா நன்மைகளையும் தந்தருளுவார்; "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10) என்று வேதம் கூறுவதுபோல, நாம் கேட்காமலே, நம் இருதயத்தின் விருப்பங்களை ஆண்டவர் அருளிச்செய்வார். தாவீது ராஜா, இதையே, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1) என்று கூறுகிறான். தேவன் உங்களோடு இருந்தால், உங்களுக்கு வேண்டியவை எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வீர்கள். நாம் ஆண்டவருக்கு பயந்திருக்கும்போது, அவரைத் தேடும்போது, அவரை சேவிக்கும்போது, நமக்கு ஒன்றுங் குறைவுபடாமல் அவர் பார்த்துக்கொள்வார்.

"நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா" (லூக்கா 22:35) என்று கேட்டு, இந்த சத்தியத்தை இயேசுதாமே தம் சீஷர்களுக்கு நினைப்பூட்டினார். அவர்கள், "இல்லை, ஆண்டவரே," என்று பதில் கூறினார்கள். ஆண்டவர், அவர்களுக்கு ஆவிக்குரிய வல்லமையையும் இவ்வுலக பிரகாரமானவற்றையும் கொடுத்து, பிசாசுகளை துரத்தவும், நோயுற்றோரை குணப்படுத்தவும் வேண்டிய அதிகாரத்தை அருளி செய்தார். ஆகவேதான் அவர்கள், "ஆண்டவரே, எங்களுக்கு ஒன்றும் குறைவுபடவில்லை," தைரியமாகக் கூறினார்கள்.

இன்றைக்கு வீட்டில் குறைவு ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் திடன்கொள்ளுங்கள் - உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் தேவன் அருளிச்செய்வார். ஒன்றுமில்லாத நிலை, "நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை" (சங்கீதம் 37:25) என்று வேதம் கூறுவதுபோல பரிபூரணமாக மாறும். நீதிமான்கள், தேவ ஜனங்கள் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை; தேவைகளின் மத்தியில் தவிப்பதில்லை. நீங்கள் ஒன்றிலும் குறைவுபடமாட்டீர்கள்; உச்சிதமான ஆசீர்வாதங்கள் வந்து சேரும். அன்பானவர்களே, உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்க ஆண்டவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்கு நல்ல மேய்ப்பனாக இருக்கிறீர். உண்மையுள்ளவரான நீர், வாக்குத்தத்தத்தைக் காக்கிற தேவனாயிருக்கிறபடியினால், எனக்கு ஒன்றும் குறைவுபடாது என்று தாவீதைப் போல தைரியமாக அறிக்கையிடுகிறேன். அதிகமாய் உம்மை உண்மையுடன் தேடவும், ஜெபத்தில் நேரத்தை செலவிடவும், உம்முடைய வசனத்தை தியானிக்கவும், அனுதினமும் உம்மை கிட்டிச்சேரவும் எனக்கு உதவி செய்தருளும். எல்லாவற்றுக்கும் மேலான இடத்தை உமக்குக் கொடுத்து, உம்மை என் வாழ்க்கையின் மையமாக வைத்து, முழு இருதயத்தோடும் உம்மை தேடக்கூடிய கிருபையை எனக்கு தந்தருளும். என் வாழ்க்கை உமக்கு முன்பாக நற்கந்தமாக விளங்கும்படி என் முழு பெலத்தோடும் உம்மில் அன்புகூர உதவி செய்யும். நாம் உம்மை கிட்டிச் சேர சேர, நீர் எனக்காக யாவற்றையும் செய்து முடித்து, கோணலான பாதையை செவ்வையாக்குவீர் என்று நம்புகிறேன். உம்முடைய சமாதானமும் சந்தோஷமும் என் வீட்டை நிரப்பட்டும்; உம்முடைய அன்பின் பராமரிப்பில் என்னை சுகமாய்க் காத்துக்கொள்ளும். உம்முடைய சமுகத்தில் என்னை பூரணமாக்கவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.