அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்" (புலம்பல் 3:25) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். ஆண்டவருக்காக நெடுங்காலமாக காத்திருக்கிறீர்களா? அற்புதத்திற்காக காத்திருக்கிறீர்களா? தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு தாம் நல்லவராக இருப்பதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். இன்றைக்கு அவர் உங்களுக்கு ஒரு அற்புதத்தை அருளுவார்; உங்கள் ஜெபங்கள் எல்லாவற்றுக்கும் பதில் தருவார்.

இன்றைக்கு இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர ஊழியத்தின் 41வது ஆண்டுவிழாவை நாம் அனுசரிக்கிறோம். ஜெப கோபுரங்கள் மூலம் செய்யப்படும் ஊழியத்தினால் அநேகர் தொடப்பட்டிருப்பீர்கள் என்று நிச்சயமாய் நம்புகிறேன். இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜெப கோபுரங்கள் செயல்படுகின்றன. அங்கு ஜெப வீரர்கள் ஜனங்களுக்காக ஜெபித்து, அவர்கள் கண்ணீரை துடைக்கிறார்கள்.

இந்த ஊழியம் என் வாழ்க்கையில் எப்படி உதவியது என்ற சம்பவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒருநாள், நான் கல்லூரியிலிருந்து என்னுடைய உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக புறப்பட்டேன். நேரம், மாலை 6 மணியை தாண்டிவிட்டது. இருட்டத் தொடங்கியது. முன்பு ஒருபோதும் செல்லாத ஒரு பாதையில் கூகுள் வழிகாட்டலை நம்பி (Google Maps) நான் சென்று கொண்டிருந்தேன். திடீரென என்னுடைய மொபைல் போனில் மின்னூட்டம் குறைந்தது, அது அணைந்துபோனது. பாதை தெரியாத காரணத்தினால் நான் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் பயந்துபோனேன். "ஆண்டவரே, பாதையை தவறவிட்டுவிட்டேன். என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை," என்று ஜெபித்தேன். சென்னை வானகரம் பகுதியின் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். திடீரென என் இடப்பக்கத்தில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம் இருப்பதை பார்த்தேன். என்னுடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்துவிட்டதை உணர்ந்தேன். என்னுடைய உறவினர் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதை மறந்து, நேராக ஜெப கோபுரத்திற்கு சென்று, தியான அறைக்குள் போய் தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.  ஜெப கோபுரம், அநேகருக்கு பெரிய ஆசீர்வாதமாக விளங்கி வருகிறது. நம்முடைய தொலைபேசி ஜெப கோபுரத்தின் மூலம் அநேக ஜெபங்களுக்கு பதில் கிடைக்கிறது. நாம் ஜெபிப்பது நிறைவேறுகிறது. ஆகவே, ஜெப கோபுரங்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம்.

அவ்வாறே, ஆண்டவர் உங்கள் ஜெபங்கள் எல்லாவற்றுக்கும் பதில் அளிப்பேன் என்று இன்றைக்கு வாக்குக்கொடுக்கிறார். "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10) என்று வேதம் கூறுகிறது. ஆண்டவரிடமிருந்து குழந்தை பாக்கியமோ, பிள்ளையானவன் கெட்ட நடத்தையிலிருந்து திரும்புவதை குறித்த நம்பிக்கையோ, எந்த ஆசீர்வாதத்தை பெறுவதற்கு நீங்கள் காத்திருந்தாலும், இன்றைக்கு அந்த ஆசீர்வாதத்தை, அற்புதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைந்த இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். உமக்காக காத்திருக்கிறவர்களுக்கும், உண்மையாய் உம்மைத் தேடுகிறவர்களுக்கும் நீர் நல்லவராக இருக்கிறீர் என்ற வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய ஜெபமும், கனவுகளும் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. நீர் அற்புதமாய் இடைப்படவேண்டுமென்றும், வழிகாட்டவேண்டுமென்றும் ஜெபிக்கிறேன். நான் காத்திருக்கின்ற ஆசீர்வாதங்களையும், என்னுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு பதிலையும் தந்தருளும். முன்பு தேவைகளின் தருணத்தில் உம்முடைய பிரசன்னத்தை நான் கண்டதுபோல, என் வாழ்வில் உம்முடைய கரம் செயல்படுவதை நான் அறிந்துகொள்ள உதவி செய்யும். உம்முடைய ஜெப வீரர்கள் மூலம் நீர் தருகிற ஆறுதலுக்காகவும் பெலனுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்றைக்கு உம்முடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு, நீர் என்னை பாதுகாப்பீர்; எனக்கானவற்றை நிறைவேற்றுவீர் என்ற வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.