அன்பானவர்களே, "நீதிமானுடைய வழியோ ராஜபாதை" (நீதிமொழிகள் 15:19) என்று வேதம் கூறுகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரசன்னா என்ற அன்பு சகோதரர் தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். வேலை பளுவின் காரணமாக மனச்சோர்வும் கலக்கமும் அடைந்தார். அதனால் மனைவியோடு பிரச்னை ஏற்பட்டு, இருவரும் பிரிய நேரிட்டது. அவருடைய மனைவி காவல்துறையில் புகார் அளித்தார்; விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சகோதரர் பிரசன்னா, தனியாக தன்னுடைய நான்கு வயது பிள்ளையை கவனிக்கவேண்டியதாயிற்று. இதனால், ஒன்பது வருடங்கள் பார்த்து வந்த வேலையை இழக்கநேரிட்டது; அவருக்கு ஆதரவே இல்லை. அவருடைய நண்பர்களும் உறவினர்களும் விவாகரத்துக்கு ஒத்துக்கொள்ளும்படி ஆலோசனை கூறினர். வாழ்வின் இந்த இக்கட்டான சமயத்தில் அவர் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்துள்ளார். அங்கே ஜெப வீரர்கள் அவருக்காக ஜெபித்துள்ளனர். தேவன், புதிதாக ஒரு வேலையை அவருக்குக் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு நடந்துகொண்டே இருந்தது. அது அவருக்கு மன உளைச்சலாகவும் தொந்தரவாகவும் இருந்தது. அப்போது தீர்க்கதரிசன ஜெப மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் குடும்பமாக வருவதை அவர் கேள்விப்பட்டு அதில் பங்கு பெற தீர்மானித்தார். என்னிடம் ஜெபிக்கவேண்டும் என்று அவர் நினைத்தாலும், அங்கே எங்கள் குடும்பத்தினர் பகிர்ந்துகொண்ட செய்திகள் மூலம் பெரிய நம்பிக்கை பெற்றார். தனக்காக எப்படி ஜெபிப்பது? மற்றவர்களுக்காக எப்படி வேண்டிக்கொள்வது என்று அவர் கற்றுக்கொண்டார். அவருடைய இருதயம் நம்பிக்கையால் நிறைந்தது. மாநாட்டின் நிறைவு நாளில், நான் அவர்மேல் கைகளை வைத்தபோது, தேவ வல்லமை அவரை நிறைத்தது. அந்த மாதத்திலேயே, அவருடைய மனைவி அவருக்கு பழைய குடும்ப வீடியோக்களையும், சில செய்திகளையும் அனுப்ப தொடங்கியது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இருவரும் சந்தித்தனர்; ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு ஒப்புரவானார்கள். அவரது மனைவி நீதிமன்றத்தில், அவருடன் இருப்பதாக கூறி, வழக்கை முடித்தார்கள்.  இப்போது அவர்கள் குடும்பமாக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள். ஜெப கோபுரத்தில் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் ஊழியத்தை செய்வதற்கான அழைப்பு தனக்கு இருப்பதை பிரசன்னா உணர்ந்தார். தேவன் அவருக்கு ராஜபாதையை அமைத்துக்கொடுத்தார். அவர் இப்போது நிரந்தர வேலையில் இருக்கிறார்; இயேசுவுடன் நெருங்கி ஜீவிக்கிறார்; குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கையும் ராஜபாதையாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். உங்கள் வேலையிலும், உங்கள் குடும்பத்தினரோடும் இயேசுவுக்கு ஊழியம் செய்யுங்கள்; அப்போது, தேவன், உங்கள் வாழ்வின் வழியை ராஜபாதையாக மாற்றுவார். இயேசு, உங்களுடன் நடந்தால், உங்கள் வாழ்க்கையே ராஜபாதையாக மாறும். ஆகவே, வேலைக்கு, குடும்பத்திற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்க தீர்மானம் பண்ணுங்கள்; அப்போது அவர் உங்களோடு உலாவுவார். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் துயரத்தை அவர் மகிழ்ச்சியாக மாற்றுவார்; எல்லா துக்கமும் சந்தோஷமாக மாறும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையின் வழியை ராஜபாதையாக மாற்றுவதாக நீர் வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும் மற்றும் நான் எங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம், எவ்விடத்திலும் உமக்கு ஊழியம் செய்யும்படி என்னை மறுபடியுமாய் அர்ப்பணிக்கிறேன். உம்மோடு நெருங்கி ஜீவிக்க இன்னும் அதிக நேரத்தை அர்ப்பணிக்கவும், உம்முடைய சித்தத்தின் மையத்தில் எப்போதும் இருக்கவும் விரும்புகிறேன். அநேகருக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி, மற்றவர்களுக்காக ஜெபித்து ஊழியம் செய்யும் இருதயத்தை எனக்கு அளித்தருளும். நீர் எனக்காக நேர்த்தியாக அமைத்துள்ள ராஜபாதையில் உம்முடன் கையோடு கை கோர்த்து நடக்கும் தீர்மானத்தில் நான் உறுதியாய் இருக்க உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.