அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்" (உபாகமம் 28:9) என்று கூறுகிறது. கர்த்தர், தாம் பரிசுத்தராயிருக்கிறதுபோல உங்களையும் பரிசுத்தமாக்கி, தமது சொந்த ஜனங்களாக நிலைப்படுத்த விரும்புகிறார் என்பதே இந்த வசனத்தின் பொருளாகும். நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றின்படி நடக்கும்போது அப்படி செய்கிறார்.

ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தீபிகா - மனோஜ் பிரபாகர் தம்பதியர் சென்னையில் வசித்து வந்தனர். மனோஜ், அதிகமாக வியாதிப்பட்டதினிமித்தம் வேலைக்குச் செல்ல இயலவில்லை. மருத்துவ செலவும் அதிகமானது. பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகளை செய்ய இயலாமல் தவித்தனர். அதற்காக கடன் வாங்கி, கடனும் பெருகியது. அனுதினமும் வாழ்க்கை போராட்டமாகவே கழிந்தது. அந்நிலையில் தீபிகா, ஜெப கோபுரத்தில் நாங்கள் நடத்திய ஜெபம் மற்றும் தீர்க்கதரிசன பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டார்கள். பின்னர், தினமும் ஆண்டவர் இயேசுவிடம் ஜெபித்து அவரோடு ஐக்கியம் கொள்ள ஆரம்பித்தார்கள். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை சென்னை வானகரத்தில் காலை 10 மணிக்கு நாங்கள் நடத்தும் அற்புத உபவாச ஜெபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தீபிகா கலந்துகொண்டார்கள். தனக்கு ஓர் அரசு வேலை வேண்டும் என்று அவர்கள் மிகுந்த தவிப்போடு ஜெபித்திருக்கிறார்கள். கூட்டத்தின் முடிவில், நான் ஒவ்வொருவர் மேலும் கரங்களை வைத்து ஜெபித்தேன். அவர்களுக்காக ஜெபிக்கும் தருணம் வந்தபோது, நான், "தேவன் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்," என்று தீர்க்கதரிசனமாக கூறியுள்ளேன். ஒரு வார காலத்திற்குள் அவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்தது. முன்பு மாதத்திற்கு ரூ.6,000/- சம்பாதித்துக்கொண்டிருந்த அவர்கள், புதிய வேலையில் பழைய வேலையைக் காட்டிலும் இருமடங்குக்கு அதிகமாக ரூ.14,000/- சம்பாதித்தார்கள்.

அன்பானவர்களே, நீங்கள் ஆண்டவருக்கு பரிசுத்த ஜனமாக இருக்கிறீர்கள். ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்ப வாழ்க்கையையும் நிலைப்படுத்துவார். ஆகவே, தைரியமாயிருங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, நீர் என்மேல் நிபந்தனையற்ற அன்பு வைத்திருப்பதற்காகவும், என்னை உமக்கு சொந்தமானவனா(ளா)க தெரிந்துகொண்டிருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும், உம்மோடு உலாவவும், உம்மை அதிகமாய் தேடவும் நான் விருப்பமாயிருக்கிறேன். உம்மை என் முழு இருதயத்தோடும் முழு பெலத்தோடும் தேடவும், தினமும் உம்மோடு பேசவும் வேண்டிய கிருபையை எனக்கு அருளிச்செய்யும். தினமும் என்னை உமக்குக் கிட்டிச் சேரும். நான் கடந்துசென்ற எல்லா பாடுகளுக்கும் குறைவுகளுக்கும் நீர் எனக்கு நியாயஞ்செய்து, எனக்கான ஆசீர்வாதங்களையெல்லாம் இரட்டிப்பாய் திரும்ப தருவீர் என்று விசுவாசிக்கிறேன். வாழ்வில் உயரும்படி உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தி பெலப்படுத்துவாராக. என்னுடைய பணத்தேவைகள் மகிமையில் உம்முடைய ஐசுவரியத்தால் சந்திக்கப்படட்டும். என் வீட்டில் சுகமும் ஆரோக்கியமும் உண்டாகட்டும். இந்த அற்புதத்தை செய்வதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.