அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்" (1 சாமுவேல் 2:8) என்ற வசனத்தை தியானிப்போம். இது எவ்வளவு அருமையான வசனம்! இன்றைக்கு தேவன் உங்களுக்கு இப்படிச் செய்து, உங்களை பிரபுக்களோடு அமரப்பண்ணுவார். இது, தன்னுடைய மகனாகிய சாமுவேலை கர்த்தருடைய பணிக்கு அர்ப்பணிக்கும்போது, அன்னாள் என்ற தாய் ஏறெடுத்த ஜெபமாகும்.

அன்னாள், தான் கர்த்தருக்குப் பொருத்தனை செய்தபடி, தன்னுடைய மகனாகிய சாமுவேலை அவருடைய வேலைக்கு அர்ப்பணித்தாள். அவன், தேவாலயத்தில் வளர்ந்து, இஸ்ரவேலுக்கு தீர்க்கதரிசியானான். சாமுவேல், இஸ்ரவேல் ஜனங்களுக்கு தெய்வீக வழிகாட்டுதலை கொடுத்து, அத்தேசத்தை வழிநடத்தினான். அவன் ராஜாக்களை அபிஷேகித்ததுடன், அவர்களுடன் அமர்ந்து ஆலோசனை சொல்லி, இஸ்ரவேல் தேசத்தை தேவனுடைய திட்டத்தின்படி ஆளுகை செய்ய உதவினான். அன்னாள், தன்னுடைய மகனுக்காக இந்த ஜெபத்தை செய்தபோது, அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அவள் அறியாதிருந்திருக்கலாம். ஆனால், தேவன், சாமுவேலின் வாழ்க்கையைக் குறித்து சரியாக தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு அவளை தெரிந்துகொண்டார்; அவள் சொல்லியபடியே அவனை தலைவனாக்கி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவ திட்டத்தை கொண்டுவரும் பாத்திரமாக, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாக அவனை பயன்படுத்தினார்.

அன்பானவர்களே, ஒரு தாயின் ஜெபம் விலையேறப்பெற்றதாயிருக்கிறது. தேவன் அவற்றை நிறைவேற்றுகிறார். இன்றைக்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கலாம்; அவர்களுடைய எதிர்காலத்திற்காக முறையிட்டுக் கொண்டிருக்கலாம். தேவன் அவர்களை புழுதியிலிருந்து தூக்கி, பிரபுக்களோடு உட்காரும்படி உயர்த்துவார்; தேசத்தில் செல்வாக்கான இடங்களில் அமர்த்துவார். ஆகவே, பயப்படாதிருங்கள். அதைரியப்படாதீர்கள். இன்றைக்கு தேவன் உங்களை உயர்த்துவார்; ராஜாக்களோடு அமரும்படி செய்வார்; தம்முடைய திட்டத்தை ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பண்ணி, அவற்றை நிறைவேற்றுவார். இன்றைக்கு இந்த ஆசீர்வாதத்தை நம் வாழ்வுக்காகவும் நம் பிள்ளைகளுக்காகவும் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் ஏறெடுக்கிற எல்லா ஜெபத்திற்கும் நீர் செவிகொடுக்கிறீர் என்று அறிந்திருக்கிறேன். நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி, என்னை புழுதியிலிருந்து தூக்கி, பிரபுக்களோடு அமரப்பண்ணும். நான் செய்கிற எல்லாவற்றிலும் பிரகாசிக்கவும், இந்த தேசத்தில் உயரவும், முழு உலகத்திற்கும் ஆசீர்வாதமாக விளங்கவும் எனக்கு உதவி செய்யும். இப்போதைய சூழ்நிலையில் நான் நசுக்கப்பட்டிருந்தாலும், உம்முடைய வல்லமையின் கரத்தினால் நீர் என்னை உயர்த்தி, உம்முடைய திட்டங்களை தீர்க்கதரிசனமான உரைத்து, உம்முடைய வசனத்தை அறிவிக்கும்படி என்னை தலைமை பொறுப்பில் அமரப்பண்ணுவீர் என்று முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். உம்முடைய தயைக்கு என்னை சாட்சியாக விளங்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.