அன்பானவர்களே, புதிய மாதத்தில் தேவன் உங்கள் கையின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நீங்கள், "நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். ஆனால் எந்தப் பலனுமில்லை; பாராட்டுமில்லை; ஊதிய உயர்வில்லை; பதவி உயர்வுமில்லை. என் வியாபாரம் பலன் கொடுக்கவில்லை; படிப்பில் பலன் கிடைக்கவில்லை; வாழ்க்கையே வீணாகிப்போனதாக உணர்கிறேன்," என்று சொல்லலாம். ஆனால், ஆண்டவர், "இப்போதிலிருந்து உன் கைகளின் பிரயாசத்தை நான் ஆசீர்வதிப்பேன். நீ செய்வதெல்லாம் வாய்க்கும். உன் இருதயம் கலங்காதிருப்பதாக," என்று கூறுகிறார். "உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்" (ஏசாயா 3:10) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள் தேவனுக்கும் மக்களுக்கும் முன்பாக நீதிமானாய் இருக்கிறீர்களா? தேவன் உங்களைக் கனப்படுத்துவார்; உங்கள் கைகளின் பிரயாசத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். "அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்" (நீதிமொழிகள் 12:14) என்று வேதம் இதை உறுதிப்படுத்துகிறது. அநேகர் பேசுவார்கள். ஆனால் வேலை செய்யமாட்டார்கள். தேவன், "நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்" (1 தெசலோனிக்கேயர் 4:12) என்று தம் அப்போஸ்தலன் மூலமாக கட்டளையிடுகிறார்.

தேவன் ஒவ்வொரு நாளுக்கென்றும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். இயேசு, "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டும்" என்றும், "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்" என்றும் கூறுகிறார். ஏனெனில், "ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது," என்கிறார். தினமும் காலையில், "ஆண்டவரே, நான் இன்றைக்கு என்ன செய்யவேண்டும்?" என்று கேளுங்கள். அவற்றை எழுதி, அவற்றை செய்து முடிப்பதற்கு அவரது கிருபையை கேளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பெலப்படுத்துவார். நான் அதிகாலை 2:50 மணிக்கே எழும்புகிறேன். அவர் என் வாழ்க்கையை, குடும்பத்தை, இயேசு அழைக்கிறார், காருண்யா, சீஷா ஸ்தாபனங்களை குறித்தும், ஜெபத்தை நாடும் திரளான மக்களைக் குறித்தும் எனக்கு வழிகாட்டுதலை கொடுக்கிறார். அவரது ஆவியினால் அவரது சித்தத்தை செய்வேன்; பல லட்சம்பேர் ஆசீர்வதிக்கப்படுவார்கள். சின்னவன் ஆயிரமாவான். சிறியவன் பெரிய தேசமாவான். அதே கிருபை உங்களுக்கும் வருகிறது. சேலை கடை ஒன்றில் அநேக பணியாளர்கள் வெறுமனே நின்றுகொண்டிருக்கும்போது, ஒரு மேற்பார்வையிடும் பெண்மணி, வாடிக்கையாளர்கள் எடுக்காமல் போட்டிருந்த சேலைகளை தங்கத்தைப்போல கருத்தாய் மடித்து வைத்தார். அந்தப் பெண் செய்ததால் ஊக்கம்பெற்று மற்ற பணியாளர்களும் சேர்ந்துகொண்டார்கள். வேண்டாமென போடப்பட்ட அந்தச் சேலை பின்பு வாங்கப்பட்டது. அந்தப் பெண் கட்டளையிடவில்லை; தன் கைகளால் வேலை செய்தாள்; விற்பனையும் பலனும் பின்னே வந்தன. அவ்வாறே தான் வாழ்க்கையிலும் நடக்கிறது. ஆகவே, பேசுவதை நிறுத்துங்கள்; ஜெபிக்க ஆரம்பியுங்கள்; அன்புடனும் வாஞ்சையுடனும் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் வேலை செய்யுங்கள். அப்போது நீங்கள் செய்கிறவையெல்லாம் வாய்க்கும்.

தேவன் யாரை ஆசீர்வதிப்பார்? "கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்" (சங்கீதம் 128:1,2) என்று வேதம் கூறுகிறது. எல்லா காரியங்களையும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு செய்யுங்கள்; உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். யோசேப்பு, தவறாய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டபோதும் தேவனுக்கு பயந்திருந்தான். ஆனாலும், அவன் தேவனை கனம்பண்ணியதால் அவன் செய்தவை எல்லாம் வாய்த்தன. தேசத்தை நடத்தும்படியாக அவன் உயர்த்தப்பட்டான். பொய்யான குற்றச்சாட்டுகள் வரலாம்; ஆனாலும் தேவனுக்கு பயந்திருங்கள்; அவர் உங்களை உயர்த்துவார். "குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது" (நீதிமொழிகள் 31:10-31) என்று வேதம் கூறுகிறது. மார்த்தாளைப்போல குறைகூறாதிருங்கள். மரியாளைப்போல இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருங்கள். உங்கள் இருதயத்தை தேவனிடம் ஊற்றுங்கள்; மற்றவர்கள்மேல் அன்புகூருங்கள்; அவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார். உங்கள் பிள்ளைகள் பாக்கியவான்கள் என்று அழைக்கப்படுவார்கள்; உங்கள் வீடு கனம்பண்ணப்படும்.

இறுதியாக, கர்த்தர், "அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை" (ஏசாயா 65:19-24) என்று வாக்குப்பண்ணுகிறார். உங்கள் வேலை, ஆரோக்கியம், குடும்பம் அல்லது வியாபாரம் இவையெல்லாம் முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், "அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்" என்று கூறியுள்ள ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். உங்கள் வாழ்க்கையை மறுபடியும் கட்டுங்கள்; உங்கள் கைகளின் பிரயாசத்தை அனுபவியுங்கள். உங்கள் பிள்ளைகள் பாக்கியவான்களாயிருப்பார்கள். உங்களுக்கு இந்த கிருபையை தருவதற்காக கர்த்தரின் கரம் இப்போதே உங்கள்மேல் வருகிறது. ஜெபியுங்கள்; வேலை செய்யுங்கள். கர்த்தருக்குப் பயப்படுங்கள்; உங்கள் கைகளால் பிரயாசப்படுங்கள். அனைவரையும் நேசியுங்கள்; நீங்கள் பலனை பெறுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இந்தப் புதிய மாதத்திற்காகவும் என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பதாக நீர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் கனியற்றவனா(ளா)கவும், அதைரியமாகவும் உணர்ந்தாலும் மாறாத உம்முடைய வார்த்தையின்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன். தேவ பயத்தால் என்னை நிரப்பும்; உம்முடைய பாதையில் நடப்பதற்கு பெலனையும் கிருபையையும் வாஞ்சையையும் அருளிச்செய்யும். பரிசுத்த ஆவியானவர் தயவாய் தினமும் என்னை நடத்தி, எனக்கான நோக்கத்தை காண்பித்து, அதை சந்தோஷமாக நிறைவேற்ற பெலப்படுத்துவாராக. என்னுடைய பிரயாசத்தின் பலன் உம்முடைய தயைக்கு சாட்சியாக அமையட்டும். அன்பு செலுத்தவும், ஊழியம் செய்யவும், ஜெபிக்கவும், உண்மையாக உழைத்து எனக்காக பலனை பெற்றுக்கொள்ளவும் உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.