பிரியமானவர்களே, இன்றைக்கு தேவனுடைய சத்தத்தைக் கேட்கப் போகிறோம். இன்றைக்கான வாக்குத்தத்த வசனம்,"உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்" (சங்கீதம் 91:11) என்று கூறுகிறது. நம் வழிகளிலெல்லாம் நம்மை தேவன் பாதுகாத்துக்கொள்வார் என்பதே இதன் பொருளாகும். நம்மை பொறுப்பெடுத்துக்கொள்ளும்படி தம்முடைய தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார்.


என்னுடைய தாத்தா, பேரப்பிள்ளைகளாகிய எங்களைக் காக்கும்படி தேவன் தூதனை வைத்திருப்பதாக ஒரு முறை தரிசனம் கண்டார். ஒவ்வொருவருக்கும் தேவன் அவரவருக்குரிய தூதனை வைத்திருக்கிறார் என்ற வேத வசனம் உண்மை என்று அவர் அறிந்துகொண்டார். ஆண்டவர் நம்மைக் குறித்து அதிக அக்கறையாயிருக்கிறபடியினால், அவர் நம்மை பாதுகாக்கிறார். ஆகவே, பயப்படாதிருங்கள். தேவனுக்கு பிரியமானவராயிருந்த தானியேல், சில பொல்லாத ஜனங்களால் சிங்க கெபிக்குள் போடப்பட்டபோதும் கர்த்தர்மேல் விசுவாசமாயிருந்தான்; தேவன் தன்னை இப்போதும் பாதுகாப்பார் என்று அவரை தேடினான். பசியாயிருந்த சிங்கங்கள் அவனுக்கருகில் காத்திருந்தபோதும், தேவன் தம் தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டு, அவை தானியேலை சேதப்படுத்தாதபடி காத்துக்கொண்டார் என்று வேதம் கூறுகிறது. அவற்றால் அவனுக்கருகில் வர இயலவில்லை. நம் தேவன் எவ்வளவு வல்லமையுள்ளவர்!


அன்பானவர்களே, உங்களை விரோதிக்கிறவர்கள் சிங்கங்களைப் போல கெர்ச்சிக்கலாம்; சூழ்நிலைகள் உங்களை விழுங்கிப்போடுவதுபோல அச்சுறுத்தலாம்; ஆனாலும் உங்களைக் காக்கும்படி தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் என்ற வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர்களால் உங்களுக்கு தீங்கு செய்ய இயலாது. தேவ தூதர்கள் இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் அடக்கிப்போடுவார்கள். நீங்கள் சுகமாய் இருப்பீர்கள். உன்னதமானவரின் நிழலில் தங்குகிறவர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும் என்று 91ம் சங்கீதம் கூறுகிறது. தானியேலை போல, எப்போதும் கர்த்தரின் நாமத்தை உயர்த்தி, அவருடைய நாமத்தினால் நின்று, "பொல்லாதவர்கள் எனக்கு விரோதமாக வந்தாலும், நான் கர்த்தருடைய நாமத்தை விடமாட்டேன். அவருடைய நாமத்திற்காக நிற்பேன்," என்று அறிக்கை செய்யுங்கள். தேவன் உங்கள் பட்சத்தில் நிற்பார்; உங்களை அச்சுறுத்துகிறவர்களின் வாய்களை தம்முடைய தூதர்களை கொண்டு கட்டிப்போட்டு உங்களை பாதுகாப்பார். இதற்காக தேவனை ஸ்தோத்திரிப்போம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எப்போதும் உம் கண்கள் என்மீது வைக்கப்பட்டிருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உம்மில் மாத்திரமே நான் நம்பிக்கையாயிருக்கிறேன். உம்முடைய நாமத்திற்காக நான் அசையாமல் உறுதியாய் நிற்கிறேன். என்னை விழுங்கிப்போடுவதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்து அச்சுறுத்தினாலும், உம்முடைய கிருபையின்மேல் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். நீர் பரலோகத்திலிருந்து என் கூப்பிடுதலை கேட்டு, என்னை பாதுகாப்பதற்காக எழும்பினீர். இந்த அச்சுறுத்தல்களுக்கு என்னை விலக்கிக் காத்து, விடுவிக்கும்படி உம்முடைய தூதனை அமர்த்துவதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். பொல்லாத மக்கள் முன்பு நீர் எனக்கு பூரண வெற்றியை தந்து கனப்படுத்துவீர் என்பதால் ஒரு தீங்கும் என்னை சேதப்படுத்தாது. எல்லா நாமங்களுக்கும் மேலான உம்முடைய வல்லமையான நாமத்திற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.