அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அன்போடு வாழ்த்துகிறேன். என்னுடைய பேத்தி ஸ்டெல்லா ரமோலாவும் அவளுடைய கணவர் டேனியல் டேவிட்சனும் இன்று தங்கள் முதலாவது திருமண ஆண்டு நிறைவை கொண்டாடுகிறார்கள். ஆகவே, இது விசேஷித்த நாளாகும். இந்த சந்தோஷமான நாளில் அவர்களுக்காக ஜெபிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

"நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை" (ஆதியாகமம் 28:15) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். தேவனாகிய கர்த்தர் யாக்கோபிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். நம் தேவன், தம் வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம், முழு இருதயத்தோடும் அவரை தேடவேண்டும். அப்போது, வேதாகமத்தில் நாம் வாசிக்கிற வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் தேவன் நிறைவேற்றுவார். ஆகவே, நாம் வேதத்தை வாசிக்கும்போது, ஆசீர்வாதங்களை உரிமை பாராட்டுவோம்; ஆண்டவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார்; எப்பொழுதும் நம்மோடு கூட இருப்பார்.

"நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்" (நீதிமொழிகள் 8:30) என்று வேதம் கூறுகிறது. இவ்வாறு தேவன் நம்முடன் இருக்கும்போது, நம் வாழ்க்கை எவ்வளவு பாக்கியமானதாக இருக்கும்! நீங்கள் ஆண்டவரோடு அவ்வாறு நெருங்கி ஜீவிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பாருங்கள். ஆண்டவருக்கு பிரியமானபடி வாழ்ந்திடுங்கள். அவர் எவ்வாறு பதில் செய்வார்? ஆண்டவர் உங்களோடு கூட இருந்து உங்களை வழிநடத்தி, தமது வழிகளை உங்களுக்குப் போதிப்பார் (சங்கீதம் 119:33, 34; 32:8). அவர் தமது கண்களை உங்கள்மீது வைத்து உங்களுக்கு ஆலோசனை கொடுப்பார். அதற்காக நாம் தேவ பிரசன்னத்தில் காத்திருக்கவேண்டும்.

அனைவர் வாழ்க்கையிலும் ஜெபம் அவசியமாகும். எந்த அளவு அதிகமாக ஜெபிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு ஆண்டவரை நெருங்க முடியும். நீங்கள் அவரை கிட்டிச் சேர சேர, அவருடைய சத்தத்தை நன்கு அறிந்திடுவீர்கள். உங்கள் வாழ்க்கையைக் குறித்த தமது சித்தத்தின்படி அவர் உங்களை வழிநடத்துவார். ஆண்டவருடைய வழிநடத்துதலை நீங்கள் பின்பற்றும்போது, உங்கள் வாழ்க்கை நேர்த்தியாய் அமையும். அப்படிப்பட்ட ஜீவனால் நம்மை நிரப்பும்படி அவரிடம் கேட்போம்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய சித்தத்தின்படி என்னை வழிநடத்துவதாக கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என் வாழ்க்கையை உம் அன்பு கரங்களில் முற்றிலும் ஒப்படைக்கிறேன். உம்மோடு அதிக நேரம் செலவிடவும், அனுதினமும் உம்மை கிட்டிச் சேரவும் எனக்கு உதவி செய்யும். உம்முடைய திட்டத்தின்படியே நான் நடக்க விரும்புகிறேன்; ஆகவே, உம்முடைய சத்தத்தை கவனமாய் கேட்கவும், உம்முடைய வழிகாட்டுதலில் நடக்கவும் எனக்கு உதவி செய்யும். நீர் வாக்குத்தத்தத்தை காக்கிற தேவனாயிருக்கிறீர். உம்முடைய வார்த்தையாகிய வேதத்தின் மூலம் எனக்கு கூறியிருக்கிற எல்லா வாக்குத்தத்தங்களையும் நீர் நிறைவேற்றுவீர். ஆயுள்பரியந்தம் நீர் என்னை ஆசீர்வதித்து வழிநடத்துவீர் என்பதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.