அன்பானவர்களே, சிங்கத்தைப் போல தைரியமாயிருங்கள். "என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு." (2 தீமோத்தேயு 2:1) என்று இன்றைய வாக்குத்தத்தத்தின்படி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இயேசுவில் மாத்திரமே நீங்கள் கிருபையையும் பெலனையும் கண்டடைய முடியும். உபத்திரவங்கள் பெருகும்போது, இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் கிருபையில் நீங்கள் வளர்ந்து பெருகுவது அவசியம். போராட்டங்கள் எதிர்ப்படும்போது, நாம் பெலவீனமாக உணர்கிறோம். "ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது" (நீதிமொழிகள் 24:10) என்று வேதம் கூறுகிறது.  வாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு நாம் களைத்துபோவோமானால், நமக்கு கொஞ்ச பெலன் மாத்திரமே இருக்கிறது என்பதே இதன் பொருள். இதையே பவுல், "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு" (1 தீமோத்தேயு 6:12) என்று இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தை குறிப்பிட்டு எழுதுகிறார். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் அதிகமதிகமாய் வளரவேண்டும். "நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்" (கொலோசெயர் 1:29) என்று பவுல் கூறுகிறார்.

பலவேளைகளில், ஆண்டவருடைய பிரசன்னம் நம்மோடிருக்கிறதை நாம் உணராமற்போகலாம். கர்த்தர், பயங்கரமான பராக்கிரமசாலியாய் உங்களோடு இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. இக்கட்டான நேரங்களில் நாம் இதை மறந்துபோகிறோம். இயேசு கிறிஸ்துவின் வல்லமையை நாம் பின்தொடரவேண்டுமென பவுல் கூறுகிறார். "என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்" (எபேசியர் 6:10) என்று அவர் எழுதியிருக்கிறார். நான் களைப்பாக உணரும்போது, உபவாசித்து, ஜெபித்து, தேவனுடைய வல்லமையை மீண்டும் பெற்றுக்கொள்ள பிரயாசப்படுவேன். மாம்சம் பெலவீனமானது; ஆவியோ உற்சாகமுள்ளது என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. இன்றைக்கும் வேதம், "என் கிருபை உனக்குப்போதும்" (2 கொரிந்தியர் 12:9) கூறுகிறதுபோல, இயேசு கிறிஸ்துவின் கிருபையில் நாம் பெலனை பெற்றுக்கொள்ள முடியும். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிருபை நிறைந்தவராக இருக்கிறார். இயேசுவின் கிருபையை நாம் சார்ந்துகொள்ளும்போது, பெலத்தின்மேல் பெலனடைவோம். இயேசு கிறிஸ்துவில் மாத்திரம் காணப்படும் கிருபையில் தொடர்ந்து பெலப்பட்டு, திடனடையுங்கள் என்று வேதம் கூறுகிறது.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் கொடுத்துள்ள வல்லமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய கிருபையில் என்னை பெலப்படுத்தும்படி நீர் என்னோடு கூட இருப்பதை அறிந்து நன்றி செலுத்துகிறேன். உம்மை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்று உம்முடைய வார்த்தை கூறுகிறது. உம்முடைய கிருபையில் நான் குறைவுபடாமல், சரீரத்திலும் ஆத்துமாவிலும் ஆவியிலும் பெலப்பட உதவும். நான் பயங்கரமான பராக்கிரமசாலியாக பெலப்படும்படி, உம்முடைய கிருபையே என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பூரணமாக செய்து முடிக்கட்டும். நான் உமக்குள் ஒரு சிங்கம்போல தைரியமாக நிற்கும்படி செய்யும்; எந்த தீங்கும் என்னை தொடாதபடி காத்துக்கொள்ளும். நாள்தோறும் நான் பெலப்பட நீர் உதவுவதால் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.