அன்பானவர்களே, மிகுந்த சந்தோஷத்தோடு உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு என்னுடைய தந்தை Dr. பால் தினகரனின் பிறந்தநாள். அவருக்கும், இன்றைக்கு தங்கள் பிறந்தநாளை காண்கிற ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துதல்களை தெரிவிக்கிறேன். இந்தப் பிறந்தநாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாகவும் ஆசீர்வாதமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்" (உபாகமம் 14:2) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். நீங்கள் ஆண்டவரின் பார்வைக்கு அருமையானவர்கள். நீங்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்; நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். தேவன் யாரை தமக்குச் சொந்த ஜனம் என்று கூறுகிறார்? கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிறவர்கள் அவருக்கு சொந்த ஜனமாயிருக்கிறார்கள் (யாத்திராகமம் 19:5).

இன்றைக்கு நீங்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தத்திற்கேற்ப எல்லா காரியங்களையும் செய்யும்போது, அவர் உங்களை தமக்குச் சொந்தமான ஜனமாக காத்துக்கொள்வார். உங்கள் பின்னணியை, ஆஸ்திகளை அல்லது புகழைப் பார்த்து அல்ல, அவர் உங்களை நேசிக்கிறபடியினாலும், தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறபடியினாலும் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார் (உபாகமம் 7:9). இயேசுவின் தாயாகிய மரியாளின் வாழ்க்கையில் நாம் இதைக் காண்கிறோம். அவள் சாதாரண நிலையில் இருந்தபோதிலும், ஆண்டவர் அவளை நேசித்தார். தேவ தூதன் அவளுக்குத் தோன்றி, "கிருபை பெற்றவளே" என்று வாழ்த்தி, அவள் தேவனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறாள் என்று தெரிவித்தான் (லூக்கா 1:28,30). யாரென்றே சமுதாயத்திற்கு தெரியாத மரியாளை தேவன் நேசித்து, கிருபை பாராட்டினபடியினால், பூமிக்கு இரட்சகரை கொண்டுவருவதற்கு அவளை தெரிந்துகொண்டார்.

அன்பானவர்களே, இன்றைக்கு தேவ தயவு உங்களோடு இருக்கிறது. நீங்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால் அவர் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். மகத்தான, வல்லமையான காரியங்களைச் செய்வதற்கு அவர் உங்களுக்கு உதவுவார். வேலையில், குடும்ப வாழ்வில், தனிப்பட்ட வாழ்வில், ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் அதைக் காண்பீர்கள். இவை எல்லாவற்றிலும் பெரிய தயவை பார்ப்பீர்கள். நீங்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்கிறபடியினால், அவருக்குச் சொந்த ஜனமாயிருக்கிறீர்கள். ஆகவே, சந்தோஷமாயிருங்கள். தேவன் உங்கள் மூலமாக வல்லமையான காரியங்களைச் செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலம் நீர் என்னை உற்சாகப்படுத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என்னை நேசிக்கிறபடியினால், என்னை உமக்கென்று தெரிந்துகொண்டிருக்கிறீர். எல்லா காரியங்களிலும் உமக்குக் கீழ்ப்படிவதற்கும், உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும் என்னை அர்ப்பணிக்கிறேன்; நீர் என்மேல் கிருபை பாராட்டி, என்னை உமக்குச் சொந்த ஜனம் என்று அழைத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் வாழ்வில் எல்லாவிதங்களிலும் நான் மகா பெருக்கத்தை காணும்படி, எல்லா பொக்கிஷங்களையும் எனக்கு தந்து இன்றைக்கு ஆசீர்வதித்தருளும். என்னுடைய எல்லா பிரயாசங்களையும், என் குடும்பத்தையும், ஆவிக்குரிய வாழ்வையும் ஆசீர்வதித்து, எப்போதும் என்னை உமக்குச் சொந்த ஜனமாக வைத்துக்கொள்ளும். என் வாழ்வில் உம்முடைய கிருபை விளங்குவதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.